வியாழன், 6 செப்டம்பர், 2012

செல்லப்பிராணி..

நாய்களைக் காதலிப்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களோடு
அவர்களது உறவு முரணாகும்போது
சங்கிலியைக் கையில் மாட்டி
வேறொரு உலகத்துக்கு
இட்டுச் செல்கின்றன.
உருவாக்கப் புன்னகையில்லாமல்
ஓடிவந்து கன்னம் நக்குகின்றன.
வாலை வளைத்து இழைத்தபடி..
அவற்றின் பற்களோ நகங்களோ
கீறினாலும் நிறுத்தமுடியாத ரத்தம்
பெருகிக்கொண்டே இருப்பதில்லை.
முடிகள் சுவாசக்கோளாறு
உண்டாக்கினாலும்
சுவாசமே கோளாறாவதில்லை.
சில எலும்புத் துண்டுகள்
அல்லது பந்து போதும்
அவற்றுக்கு நிறைவளிக்க.
மூத்திரம் பெய்யவும்
மலம் கழிக்கவும்
வெளியே ஓடும் நாய்
அசுத்தப்படுத்துவதில்லை வார்த்தைகளால்.
மனிதர்களுடன் பேசுவதைவிட
குரைப்பொலிகளுடன் உரையாடுவது
இலகுவாய் இருப்பதால்
நாய்களோடு வாழ்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்

4 கருத்துகள்:

  1. உண்மை உண்மை, ஆனால் சின்ன திருத்தம்.
    "சில எலும்புத் துண்டுகள்
    அல்லது பந்து போதும்
    அவற்றுக்கு நிறைவளிக்க"
    இல்லை . அவைகளுக்கு தேவை அன்பு. ஒரு மணி நேரம் வெளியே சென்று விட்டு வந்தால் போதும்,
    அவை தரும் வரவேற்பு அலாதி. கல்லூரியில் இருந்து மகன், அலுவலகத்தில் இருந்து மகளும்,
    கணவரும் வந்துவிட்டால் போதும், வீடே ரணகளம். ஆக, அந்த எலும்பு துண்டோ அல்லது பந்தை
    கூட அவை எதிர்ப்பார்க்காமல், அன் கண்டிஷனல் லவ் தான்.

    இப்படிக்கு இரண்டு செல்லங்களுடன் வாழ்பவள் :-)

    பதிலளிநீக்கு
  2. //கீறினாலும் நிறுத்தமுடியாத ரத்தம்
    பெருகிக்கொண்டே இருப்பதில்லை.//
    பெருகிக் கொண்டே இருக்கிறதோ இல்லையோ -
    அருகில் இருக்கும் மருத்துவ உதவி
    அவசியம் இல்லையோ
    - அட நானும் கவிதை எழுதிட்டேன்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி உஷா

    நன்றி துளசி

    நன்றி கந்தனார்.மருத்துவம் அவசியம்தான் அதுக்கு வெறி பிடித்திருந்தால். ஆனால் அன்பு பிடித்திருந்தால் ஒன்றும் செய்யாது.:)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))