சனி, 15 அக்டோபர், 2011

வெய்யில்.

விடியலில் ராஜகுமாரனின் அணைப்பாய்
நண்பகலில் ராட்சசன் பிடியாய்
மாலையில் வானப்ரஸ்த விலகலாய்.

பருவப்பெண்ணாய்
பொன்னிறம் ஜொலிக்க
வீரியக் கதிர் பாய்ச்சி.
பருவம் தப்பும்பெண்ணாய்
குளிருக்குள் ஒடுங்கி

மஞ்சள்நிற அருவியைப் போல
வீழ்ந்துகொண்டே இருக்கிறது
கருமேகங்கள் பாறைகளாய்
சூழ்நாள் தவிர.

பூமியெங்கும் உழுது செல்கிறது
வயலானாலும்
மலையானாலும்
பழைய கோட்டையானாலும்
மூடிய இலைகளானாலும்
பாரபட்சமில்லாமல்..

அட்சரேகை தீர்க்கரேகை
பாகைகள் அறியாமல்
வெய்யிலில் கிடப்பவர்
வர்ணமெல்லாம் உறிஞ்சி
கறுப்பை பூசி

ஆதிக்கக்காரர்கள் போல்
அடித்துச் செல்கிறது
சுவாசத்தைப் புண்ணாக்கும்
வெங்காற்றையும்,
தாகத்தில் சிக்கிய
மனிதர்களையும்..

மஞ்சள் ராஜாளியாய்
பூமியின்மேல் சிறகுவிரித்து
கவிழ்ந்து செல்கிறது.

மரக்கிளைக்குள் புகுந்து
வெவ்வேறு விதப்
புள்ளிக் கோலமாய்
பச்சையங்களை முத்தமிட்டு
புதுக்கவைத்து உயிர்ப்பித்து

தோண்டாமல் கிடைக்கும்
ஒப்பற்ற தங்கவெள்ளம்..
பூமியைப் புதுப்பிக்கவும்,
புதுப்பயிர்கள் கிளைக்கவும்.

4 கருத்துகள்:

  1. அருமையான சிந்தனை & கவிதை

    அதிலும் இந்த வரிகள் என்னை மிக கவர்ந்தன. //விடியலில் ராஜகுமாரனின் அணைப்பாய்
    நண்பகலில் ராட்சசன் பிடியாய்
    மாலையில் வானப்ரஸ்த விலகலாய்.///

    பதிலளிநீக்கு
  2. அருமையான சிந்தனை & கவிதை

    அதிலும் இந்த வரிகள் என்னை மிக கவர்ந்தன. //விடியலில் ராஜகுமாரனின் அணைப்பாய்
    நண்பகலில் ராட்சசன் பிடியாய்
    மாலையில் வானப்ரஸ்த விலகலாய்.///

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))